search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்தி வரி"

    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியாக வசூலிக்கிறது. டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதுதவிர, மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரி (வாட்) வசூலித்து வருகின்றன.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்வகையில், உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது. ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

    உற்பத்தி வரியை குறைப்பதால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் தாக்கம் ஏற்படும். இதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்காமல் போய்விடும். இவையெல்லாம், வரி குறைப்பால் ஏற்படும் பாதகங்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல.

    நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜி.எஸ்.டி. செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். அதன்மூலம், வரி வருவாய் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உற்பத்தி வரியை குறைக்க முடியும். அதுவரை, பெட்ரோலிய பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயைத்தான் சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.

    மத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது அதனால்தான், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதற்கு மேல், நிவாரணம் வழங்க முடியாது. மக்கள், தாங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு, உரிய விலையை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

    பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் ‘வாட்’ வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரி வருவாயில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் ‘வாட்’ வரியை குறைக்கும் நிலைமையில் இல்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இனிவரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. அதனால் ரூ.83.91-க்கு பெட்ரோல் விற்கப்பட்டது. டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து, அதன் விலை ரூ.76.98 ஆனது. #PetrolDieselPriceHike #FuelPriceHike #FederalGovernment 
    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். #ArunJaitley #PetrolDiesel
    புதுடெல்லி:

    தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது முகநூல் பதிவில் கருத்து தெரிவித்து உள்ளார்.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாட்டின் குடிமக்கள் அனைவரும் நேர்மையாக தங்களது வரிகளை சரியாக செலுத்தினால் பெட்ரோலிய பொருட்களின் மீதான அதிக வரி விதிப்பை சார்ந்திருக்கவேண்டி இருக்காது.



    சம்பளதாரர்கள் வரிகளை முறையாக செலுத்தி வரும் நிலையில் மற்றவர்களும் தங்களுடைய வரியை செலுத்துவதில் முன்னேற்றம் காணவேண்டும். எனவே அரசியல் தலைவர்கள், கருத்தாளர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் எண்ணெய் அல்லாத மற்ற வகையினங்களில் வரி ஏய்ப்பு முற்றிலுமாக நிறுத்தப்படவேண்டும்.

    நேர்மையாக வரி செலுத்துவோரின் கவலை வரிகளில் தங்களுடைய பங்கை செலுத்துவதுடன், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் சேர்த்து இழப்பீடு தருவதுதான்.

    எனவே, குடிமக்கள் அனைத்து வகையினங்களுக்கும் வரியை செலுத்தாத நிலையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை. மாறாக இவற்றின் விலையை குறைத்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

    கடந்த 4 ஆண்டுகளில் வரியில் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இதில் பெட்ரோலிய பொருட்களின் வரி பங்களிப்பு மட்டும் 0.72 சதவீதம் ஆகும்.

    எண்ணெய் அல்லாத வரிகள் மீதான உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 2017-18-ல் 9.8 சதவீதமாக இருந்தது. இது 2007-2008-ம் ஆண்டுக்கு இடையேயான கால கட்டத்தை ஒப்பிடும்போது அதிகம் ஆகும். மோடி அரசு நிதி விஷயத்தில் முன்ஜாக்கிரதை அல்லது விவேகத்தை வலுவாக வளர்த்து இருக்கிறது. நிதியளவில் ஒழுக்கம் இல்லாமல் போனால் கடன்பெறுவதுதான் அதிகரிக்கும். எனவே நிதியளவை புத்திசாலித்தமான, வலுவான கையாளும் மத்திய அரசால்தான் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்க இயலும்.

    அரசின் உத்தேசத்தின்படி பெட்ரோலிய பொருட்களின் மீது உற்பத்தி வரியில் குறைக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வருமானத்தை இழக்கச் செய்துவிடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை மறைமுகமாக விமர்சித்த அருண்ஜெட்லி, “இது பொறியில் சிக்கவைக்கும் யோசனை. எனக்கு முன்னோடியே(ப.சிதம்பரம்) இதைச் செய்ய முன்வரவில்லை என்பதே இதில் கசப்பான உண்மை” என்றும் அவர் குறிப்பிட்டார்.  #ArunJaitley #PetrolDiesel #Tamilnews 
    விலை உயர்வை தடுக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. #Petrol #Diesel #LowerDuties
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் மீதான விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக ஏறுமுகமாக உள்ளது.

    தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 80 அமெரிக்க டாலர்களை கடந்து விட்டது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தற்போதுள்ளதை விட இன்னும் சில ரூபாய்கள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பீப்பாய் 85 டாலர்கள் என்ற நிலையை அடைந்து விட்டால் டெல்லியில் சில்லரை விற்பனையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89 என்ற அளவிற்கு உயர்ந்து விடும். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களிலும் இந்த விலை உயர்வின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

    இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி மற்றும் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஓரிரு நாட்களில் சந்தித்து பேச இருக்கின்றனர்.

    இதுபற்றி பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அவற்றின் மீதான உற்பத்தி வரியை குறைக்க திட்டமிட்டு உள்ளது. இது மோடி அரசு 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ததற்காக நுகர்வோருக்கு அளிக்கும் வெகுமதியாக இருக்கும்” என்றார்.

    இந்த வரி குறைப்பு அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உற்பத்தி வரியை குறைப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை குறையும்.

    அதேநேரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் 2-வது கட்டமாகவும் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டு விலை உயர்வை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.  #Petrol #Diesel #LowerDuties 
    ×